தாமரைக்கரையில் புலிகள் காப்பகத்திற்கு எதிர்ப்பு: பாெதுமக்கள் போராட்டம்

ஈரோடு மாவட்ட வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு. தாமரைக்கரையில் பொதுமக்கள் போராட்டம்

Update: 2022-02-10 13:15 GMT

பர்கூர் அருகே புலிகள் காப்பகமாக அறிவிக்கும் திட்டத்திற்கு எதிரப்பு தெரிவித்து, பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட நிலையில், மிஞ்சியுள்ள அந்தியூர், பர்கூர், சென்னம்பட்டி ஆகிய வனப்பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவிக்கும் திட்டம் உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை கொண்டு வர, அந்தியூர் அடுத்த பர்கூர் வனப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பர்கூர் உள்ளிட்ட வனப் பகுதிகளை புலிகள் காப்பகமாக அறிவிக்க கூடாது என்பதை வலியுறுத்தி, அந்தியூர் அடுத்த தாமரைக்கரை அருகில் உள்ள தாமரைக்குளம் பகுதியில், பர்கூர் ஊராட்சியிலுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறும்போது, புலிகள் காப்பகம் அறிவிக்கப்பட்டால், எங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். காட்டுக்குள் இருக்கும் நீர் நிலைகளை மக்களின் பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதும், வன பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்லவும் தடை விதிக்கப்படும்.மேலும், வனத்தில் விளையும் சிறு மகசூல்களை சேகரிப்பது தடுக்கப்படுவதுடன், மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் சாலை பகுதியிலும் தடை விதிக்கும் நிலை உருவாகும். இதுதவிர, புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டால் மக்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டு, இங்கிருந்து வெளியேற்றும் அபாய நிலையும் உண்டாகும்.

எனவே, புலிகள் காப்பகமாக அறிவிப்பதற்கு முன், வன உரிமை சட்டம் 2006யை முழுமையாக அமல்படுத்தி, மலைவாழ் மக்களின் பாரம்பரிய உரிமைகளை உறுதி செய்திட வேண்டும் என்றும், வனத்துறையின் இந்த முடிவு மலைவாழ் மக்களிடையே பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றனர்.இந்த போராட்டத்தின் போது, பர்கூர் மலைப் பகுதியை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News