ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு: அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.;
ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தன்று விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு தொழிலாளர் இணை ஆணையாளர் பா.மாதவன் அறிவுரைப்படி ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) கோ.ஜெயலட்சுமி தலைமையில் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் தொழிலாளர் தினமான நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது தொழிலாளர்களுக்கு கட்டாயம் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறதா? அல்லது பணியாளர்கள் பணிபுரிந்தால் அவர்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 நாட்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்து அதற்குரிய படிவம் தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முன்அனுமதி பெற்று தொழில் நிறுவனம் செயல்படுகிறதா? என்பது குறித்து ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் மேற்கொண்டனர்.
மொத்தம் 42 கடை நிறுவனங்கள், 45 உணவு நிறுவனங்கள், 12 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு நடந்தது. இதில் 35 கடை நிறுவனங்கள், 45 உணவு நிறுவனங்கள் மற்றும் 8 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 88 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், மாற்று விடுப்பு வழங்காமலும் பணியில் அமர்த்தியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 88 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது தொழிலாளர் துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.