பவானி அருகே அனுமதி இன்றி செயல்பட்ட 5 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம்!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அனுமதி இன்றி செயல்பட்ட 5 சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.;

Update: 2025-05-23 02:00 GMT

பவானி அருகே அனுமதி இன்றி செயல்பட்ட 5 சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இடித்து அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆண்டிகுளம் ஊராட்சிக்குட்பட்ட காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் அரசின் அனுமதி இன்றி செயல்படும் சாயப்பட்டறைகள் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் பவானி ஆற்றில் திறந்து விடுகின்றன என பொதுமக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தொடர்ந்து புகார்கள் அளித்தனர்.

இதையடுத்து, சேர்வராயன்பாளையம் பகுதிக்கு நேற்று பவானி தாசில்தார் சித்ரா தலைமையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் வனஜா, பறக்கும் படை சுற்றுச்சூழல் பொறியாளர் சுகுமார் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் சென்றனர்.

பின்னர் அதிகாரிகள் அந்த பகுதியில் செயல்படும் 10-க்கு மேற்பட்ட சாயப்பட்டறைகளில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இதில், விதிமீறல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 5 சாயப்பட்டறைகள் இடித்து அகற்ற உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, 5 சாயப்பட்டறைகளும் இடித்து அகற்றப்பட்டது.

இதையடுத்து, அந்த சாயப்பட்டறைகளின் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியத்துக்கு பரிந்துரை செய்து உடனே மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகணபதி, உதவி பொறியாளர்கள் சந்தானகிருஷ்ணன், விஷ்ணு பாலா, வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News