ஈரோட்டில் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறிப்பு: இளம்பெண் உள்பட 2 பேர் கைது

ஈரோட்டில் தனியார் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறித்த இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-03-17 01:20 GMT

ஈரோட்டில் கல்லூரி பேராசிரியரிடம் கத்தி முனையில் ரூ.20 ஆயிரம் பறித்த இளம்பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தோப்புபாளையத்தை சேர்ந்தவர் அங்கமுத்து மகன் ரகு (வயது 29). தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர். இவர் கடந்த 13ம் தேதி ஈரோடு செங்கோடம்பள்ளம் மாருதிநகரில் தனக்கு தெரிந்தவரின் வீட்டுக்கு முன்பு நின்றுகொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் ரகுவை பார்த்து தகாத வார்த்தையில் பேசி உள்ளனர். மேலும், கத்தியை காட்டி மிரட்டி ரூ.20 ஆயிரத்தை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர். பின்னர், இதுகுறித்து ரகு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ரகுவிடம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரத்தை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் மெய்யரசன் (23) என்பவர் பணத்தை பறித்ததும், இதற்கு உடந்தையாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பருவதநல்லி பகுதியை சேர்ந்த சுரேசின் மகள் வைஷ்ணவி (24) என்பவர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News