பெருந்துறையில் குடிநீர் குழாய்களை திருடிய வாலிபர் கைது

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சியில் ரூ.1.90 லட்சம் மதிப்பிலான குடிநீர் குழாய்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-09-28 02:15 GMT

கைது செய்யப்பட்ட கார்த்திக்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பேரூராட்சி பகுதியில் மத்திய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், பெருந்துறை - சென்னிமலை சாலையில் எல்லைமேடு பேருந்து நிறுத்தம் அருகில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதற்காக அப்பகுதியில் குழாய்களை இருப்பு வைத்திருந்தனர். இந்நிலையில், அவற்றில் 288 மீட்டர் நீளமுள்ள 72 துண்டு பைப்புகள் திருடு போனது. இவற்றின் மதிப்பு ரூ.1.90 லட்சம் ஆகும். இதுபற்றி அறிந்த அந்த நிறுவன மேலாளரான பவானி செம்பாண்டம்பாளையம் ராமன் நகரைச் சேர்ந்த ரகு (வயது 46) பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அங்கு குழாய் பதிக்கும் பணியில் வேலை செய்த சேலம் மாவட்டம் மேட்டூர் புதுசாம்பள்ளி மின்நகரைச் சேர்ந்த மாதையன் மகன் கார்த்திக் (வயது 25) என்பவர் குடிநீர் குழாய்களை திருடியது தெரியவந்தது. 

இதனையடுத்து, கார்த்திக்கை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், பெருந்துறையில் பவானி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அப்போது அங்கு வந்த கார்த்திக்கை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், ஈரோடு விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெருந்துறை கிளைச் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News