ஈரோட்டில் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளை
ஈரோட்டில் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
ஈரோட்டில் உணவகத்தின் பூட்டை உடைத்து ரூ.48 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு நாடார்மேட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு சொந்தமான உணவகம் அதேப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் மொத்தம் 6 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு 11.30 மணிக்கு வியா பாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் கடையில் வேலை பார்க்கும் மாஸ்டர் உணவகத்தை திறக்க வந்த போது உணவகத்தில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். ராஜேந்திரன் வேகமாக உணவகத்திற்கு வந்து கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்றபோது உணவகத்தில் பொருட்கள் அனைத்தும் கலைந்து கிடந்தன. கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.48 ஆயிரம் ரொக்க பணம் திருட்டு போய் இருப்பதைக்கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து, சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
கடையில், சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு இருந்தாலும் அவை கடந்த சில நாட்களாக வேலை செய்யாமல் இருந்ததால் உணவகத்திற்குள் புகுந்து கொள்ளையடித்த நபரை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனினும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்த துணிகர திருட்டு குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.