கோபி அருகே வீட்டுக்குள் நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக்கொடி பறிப்பு
ஈரோடு மாவட்டம் கோபி அருகே வீட்டிற்குள் நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தாலிக்கொடியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு (பைல் படம்).
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த சிறுவலூர் அருகே உள்ள சந்திராபுரம் தோட்டத்தில் ஒரு வீட்டில் குடியிருந்து வருபவர் பரமேஸ்வரன். விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 64). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனுக்கு திருமணம் ஆகி டி.என். பாளையத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி சென்னிமலையில் கணவருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். பரமேஸ்வரன் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். சரஸ்வதி வீட்டில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது , அதிகாலை 3.30 மணியளவில் சரஸ்வதி வீட்டிற்குள் நுழைந்த 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சரஸ்வதி தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்றார்.
பின்னர் அந்த நபர் திடீரென சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க தாலிக்கொடியை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால், திடுக்கிட்டு எழுந்த சரஸ்வதி திருடன், திருடன் என கத்தினார். அவரது சத்தம் கேட்டு விழித்த பரமேஸ்வரன் திருடனை பிடிக்க ஓடினார். ஆனால் அந்த நபர் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.