ஈரோட்டில் பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஒடிசா வாலிபர்: போலீசார் விசாரணை
ஈரோட்டில் பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் ஒடிசா மாநில வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பாழடைந்த வீட்டில் இறந்து கிடந்த ஒடிசா வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டில் பாழடைந்த வீட்டில் மர்மமான முறையில் ஒடிசா மாநில வாலிபர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் எந்தவித பயன்பாட்டில் இல்லாமல், நீண்ட ஆண்டுகளாக பாழடைந்த பழைய ரயில்வே காலனி குடியிருப்பு உள்ளது. இங்கு ரயில்வே பணியாளர்கள் யாரும் தங்காததால் இங்குள்ள வீடுகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
இதுதவிர, இந்த பாழடைந்த வீடுகளுக்குள் சமூக விரோதிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது வசதிக்கு ஏற்றார் போல் பெண்களை அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும், அங்கு மது பிரியர்கள் மது அருந்துவது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், அங்கு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்து கிடந்தவரின் கழுத்து பகுதி நெரிக்கப்பட்ட நிலையிலும், ஒரு கையில் வெட்டுக்காயம் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் காவிரி வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. போலீசார் விசாரணையில் இறந்தவர் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் அருகே உள்ள துன்பகாடா கிராமத்தை சேர்ந்த ஜெகநாத் ஹபல் என்பவருடைய மகன் டன்டபனி ஷபர் ( 31) என்பது தெரியவந்தது.
ஈரோட்டில் அவர் எங்கு தங்கி இருந்தார். என்ன வேலை செய்து வந்தார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, டன்டபனி ஹபல் அளவுக்கு அதிகமாக மது குடித்து இறந்தாரா? அல்லது மதுபோதையில் அவரை மர்ம நபர்கள் யாரேனும் கழுத்தை நெரித்து கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.