பவானியில் காதல் மனைவி சடலத்துடன் மது போதையில் தூங்கிய கணவன்: சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை!
ஈரோடு மாவட்டம் பவானியில் காதல் மனைவி சடலத்துடன் மது போதையில் தூங்கிய விபரீத கணவனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பவானியில் காதல் மனைவி சடலத்துடன் மது போதையில் தூங்கிய விபரீத கணவனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானி கல்தொழிலாளர் 2வது வீதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சூரியபிரபா (24). நேற்று காலை சூரியபிரபா மூச்சுப்பேச்சு இன்றி கிடப்பதாக கூறி அவரை பவானி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மருத்துவர் அவரை பரிசோதித்து விட்டு வரும் வழியிலேயே சூரியபிரபா இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து பவானி போலீசார் மருத்துவமனைக்கு சென்று கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து போலீசார் கார்த்திக்கை அழைத்துக் கொண்டு பவானி போலீஸ் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல் கிடைத்தன.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, கார்த்திக் திருச்சியில் தனியார் பஸ்சில் கிளீனராக வேலை பார்த்தபோது அதே பஸ்சில் வந்த சூரியபிரபாவிடம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி மூன்று மாதங்களுக்கு முன் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு கோவிலில் கார்த்திக், சூரியபிரபாவை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் இருவரும் கடந்த 3 மாதமாக பவானியில் வசித்து வந்தனர். கார்த்திக் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். கார்த்திக் அடிக்கடி மது அருந்தி வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் கார்த்திக்குக்கு ஈரோட்டில் உள்ள ஒரு பெண்ணிடம் தொடர்பு இருப்பது சூரிய பிரபாவுக்கு தெரிய வந்தது. இதுகுறித்து அவர் கணவரிடம் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கணவன் -மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவும் கார்த்திக் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது இது குறித்து கணவன் மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் சூரிய பிரபா திடீரென உடலில் காயங்களுடன் மூச்சு திணறி இறந்துள்ளார். அவர் இறந்தது கூட தெரியாமல் சூரியபிரபா உடலுடன் விடிய விடிய மது போதையில் கார்த்திக் படுத்து தூங்கியுள்ளார். காலை எழுந்ததும் அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற போது இறந்திருப்பது தெரியவந்தது.
சூரியபிரபா உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவரது சார்பில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் கூறியுள்ளார். எனவே தற்போது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து கார்த்திக்கிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இன்று காலை சூரியபிரபாவின் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்தது. இதன் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.