கோபிசெட்டிபாளையம் அருகே விஷ வண்டுகள் கூடு: தீயணைப்பு துறையினர் அகற்றம்

வெள்ளாளபாளையம் கோயில் வளாகத்தில் இருந்த விஷ வண்டுகளை தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.

Update: 2022-06-18 12:30 GMT

கோபி தீயணைப்பு துறையினர் விஷ வண்டுகளை தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்  அருகே உள்ள வெள்ளாளபாளையத்தில் கருப்பராயன் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான 10 க்கும் மேற்பட்ட ஆல மரங்கள் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக கோயில் திருவிழா நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழா நடத்த முடிவு செய்து கோயில் பராமரிப்பு மற்றும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செய்தனர். அப்போது கோயில் வளாகத்தில் உள்ள ஆலமரங்களில் சுமார் 50 அடி உயரத்தில் 5 க்கும் மேற்பட்ட விஷ வண்டு கூடுகள் இருப்பதும், அதில் ஆயிரக்கணக்கான விஷ வண்டுகள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்

மேலும் பராமரிப்பு பணியின்போது விஷ வண்டுகள் அவர்களை கடிக்க முயன்றது. இதனால் கோயில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் பராமரிப்பு பணியை விட்டு வெளியேறினர். அதைத்தொடர்ந்து இதுகுறித்து கோபி தீயணைப்புத்துறையினருக்கு கோயில் திருவிழா குழுவினர் தகவல் அளித்தனர். தகவல் அறிந்த கோபி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையில் முன்னனி தீயணைப்பு வீரர் கோபால், போக்குவரத்து அலுவலர் மாதப்பன், தீயணைப்பு வீரர்கள் ராமச்சந்திர மூர்த்தி, தேவராஜ் உள்ளிட்ட தீயணைப்புத்துறையினர் உடனடியாக வெள்ளாளபாளையத்தில் விஷ வண்டுகள் கூடு அமைத்து இருந்த பகுதிக்கு சென்றனர்.

விஷ வண்டுகள் சுமார் 50 அடி உயரத்தில் கூடு அமைத்து இருந்ததால் கீழே இருந்து அவற்றை விரட்ட முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு வாகனம் மீது கவச உடையுடன் ஏறிய தீயணைப்பு வீரர்கள் மரத்தின் உயரமான இடத்தில் இருந்த விஷ வண்டுகளின் கூடுகளையும், கூட்டில் இருந்த விஷ வண்டுகளையும் தண்ணீரை பீய்ச்சி விரட்டி அடித்தனர். விஷ வண்டுகள் முழுமையாக அகற்றப்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News