கூலித்தொழிலாளி கொலை வழக்கு: டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை

வெள்ளோடு அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க பெருந்துறை டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைப்பு.

Update: 2021-09-13 11:00 GMT

விசாரணையில் ஈடுபட்டடுள்ள தனிப்படையினர்.

சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே ராக்சாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வன் என்கிற சண்முகசுந்தரம் (வயது 38). இவர் வெள்ளோடு பகுதியில் உள்ள ஒரு மது பாரில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கமலா. செல்வனுக்கும், கமலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இதனால் செல்வனிடம் கோபித்துக்கொண்டு கமலா தனது 5 வயது மகனுடன் நத்தக்காட்டுவலசில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதன் காரணமாக செல்வன் தனது தாயார் பழனியம்மாளுடன் வசித்து வந்தார். செல்வனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி காலையில் வெள்ளோடு மாரியம்மன் கோவிலில் நடந்த உறவினர் ஒருவரின் குடும்ப நிகழ்ச்சிக்கு செல்வதாக தனது தாய் பழனியம்மாளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் வெள்ளோடு அருகே கனகபுரம் ரோட்டில் மணக்காட்டு தோட்டம் என்ற பகுதியில் தலையில் பலத்த காயங்களுடன் செல்வன் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து வெள்ளோடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க பெருந்துறை டி.எஸ்.பி செல்வராஜ் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர், கொலை சம்பவம் நடந்த அருகே பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது செல்வன் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் செல்வது சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும் செல்வனின் செல்போனை கைப்பற்றிய தனிப்படை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News