சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்

கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2021-08-21 08:45 GMT

உடைப்பு ஏற்பட்ட கீழ் பவானி வாய்கால்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் கடந்த 15ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. ஈரோடு  நசியனூர் அருகே மலைப்பாளையம் கிராமத்தில் காங்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட்ட மதகு பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு லேசான கசிவு ஏற்பட்டது.  இந்த கசிவு உடனடியாக சரி செய்யப்பட்டது.

ஆனால், தண்ணீரின் அழுத்தம் காரணமாக நேற்று காலை திடீர் உடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் இருந்து தண்ணீர் விளைநிலங்களில் வெளியேறியது. இதனால் வேலம்பாளையம், வரவன்காடு, மலைப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மேலும் சுமார் 100 ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்ததோடு  நெற்பயிர் மற்றும் மஞ்சள்கள் ஆகியவை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. வீடுகளில் தண்ணீர் சூழ்ந்த 62 குடும்பங்களை சேர்ந்த 200 பேர் பாதுகாப்பான இடத்தில் 2வது நாளாக இன்றும் தங்க வைக்கப்பட்டு வருவாய்துறை சார்பில் உணவு, உடைகள் வழங்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பொதுப்பணித்துறையினர் செப்பனிடும் பணிகளை தொடங்கி உள்ளனர். இப்பணிகளை 10 நாட்களில் முடிக்க பொதுப்பணித்துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் உடைப்பு காரணமாக வெளியேறி நீரால் கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் அதற்கான உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News