ஈராேடு: வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடக்கம்
வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் சீசன் தொடங்கியதால் வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.;
ஈரோடு அருகே வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த பறவைகள் சரணாலயம் 77.185 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை வெளியூர் மற்றும் உள்ளூர் பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வரும். பின்னர் மீண்டும் தங்களது இருப்பிடத்திற்கே சென்று விடும். அதே போல் இந்த ஆண்டுக்கான சீசன் கடந்த மாதம் தொடங்கியது.
தற்போது போதுமான மழை பெய்துள்ளதால் சரணாலய ஏரியில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. பறவைகளுக்கு உணவாக மாதந்தோறும் ஆயிரக்கணக்கான மீன் குஞ்சுகளை சரணாலய ஏரியிலேயே வனத்துறையினர் விட்டு வருகின்றனர். சரணாலயத்தை காணவரும் குழந்தைகளை கவரும் வகையில் பட்டாம்பூச்சி பூங்கா ஒன்றும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.
சரணாலய ஏரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நிழற்குடைகள், அமரும் வகையில் இருக்கைகள், நடைபாதை கற்கள், ஊஞ்சல்கள், குடிப்பதற்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் என பல்வேறு வசதிகள் சுமார் ரூ.5 கோடி மதிப்பில் செய்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் சரணாயலத்தை காண வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கேண்டீன் வசதியும் விரைவில் செய்யப்பட உள்ளது. சரணாலய ஏரியில் யாரும் மீன்களை பிடிக்காமல் இருக்கும் வகையில் வனத்துறை ஊழியர்கள் இரவு, பகலாக கண்காணித்து வருகின்றனர்.