ஈரோடு: 70 கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி

ஈரோடு மாவட்டத்தில் 70 கோவில்களில் திருவிழா நடத்த அனுமதிபட்டு,கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்

Update: 2021-12-15 10:45 GMT

திண்டல் மலை.

கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கோவில்களுக்கு விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் திருவிழா, தேரோட்டம் உள்ளிட்டவை நடத்த கோரிக்கை விடுத்திருந்தனர். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கடந்த டிசம்பர் 14-ம் தேதி முதல் வரும் பிப்ரவரி 4-ம் தேதி வரை, மாவட்டத்தில் உள்ள 70 கோவில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், அந்தியூர் செல்லீஸ்வரர்கோவில், சென்னிமலை கைலாசநாதர் கோவில், பெருந்துறை சோழீஸ்வரர் கோவில், சத்தியமங்கலம் வேணுகோபால் சுவாமி கோவில், பாரியூர் ஆதி நாராயண பெருமாள் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், வீரப்பன்சத்திரம் மாரியம்மன் கோவில், ஈரோடு மகாவீர ஆஞ்சநேயர் கோவில், திண்டல் வேலாயுதசுவாமி கோவில்,பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 70 கோவில்களில் குறிப்பிட்ட முக்கிய விழாக்கள் மட்டும் நடத்திக் கொள்ளலாம். 


குண்டம் இறங்க கோவிலின் பூசாரிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பக்தர்களுக்கு இல்லை. தேரோட்டம், மலர் பல்லக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை. ஆருத்ரதரிசனம், அனுமன் ஜெயந்தி, திருக்கல்யாணம், திருவாதிரை, தைப்பூசம், போகி பண்டிகை, பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு சமூக இடைவெளியுடன் அனுமதி வழங்கப்படுகிறது. 

கோவிலில் பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், மஞ்சள் நீர் விளையாட்டு, மாவிளக்கு எடுக்க அனுமதி இல்லை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி விழாக்களை நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News