கவுந்தப்பாடி செட்டிபாளையத்தில் வழிபாட்டு நடுகல் நடும் இடம் ஆக்கிரமிப்பு

கவுந்தப்பாடி செட்டிபாளையத்தில் நடுகல் வைத்து வழிபாடும் இடத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

Update: 2022-05-19 15:15 GMT

வழிபாட்டு தலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக பவானி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள பெரியபுலியூர் எல்லீஸ்பேட்டை செல்வநகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இவர்களது சமூகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

இவர்களது தாய் தந்தையர் உள்ளிட்ட முன்னோர்கள் இறந்தவுடன் குறிப்பிட்ட சில தினங்களில் அவர்களின் நினைவாக பெரியபுலியூர் பகுதியில் உள்ள செட்டிபாளையம் அருகே உள்ள செல்லகுட்டிபாளையத்தில் தங்களது முன்னோர்கள் நினைவாக நடுகல் வைத்து ஆண்டுதோறும் தை மாதம் படையலிட்டு வணங்கி வருவது வழக்கம்.

இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக செல்லகுட்டிபாளையம் பகுதியில் இருந்த நடுகல் நடும் இடத்தை தனி நபர் ஒருவர் அந்த கற்களை அகற்றிவிட்டு ஆக்கிரமிப்பு செய்து வேலி அமைத்து இருப்பதாக புகார் மனுவை தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுசாமி மற்றும் கொத்துகார் ராமர் உள்ளிட்ட கிராம மக்கள் பவானி வட்டாட்சியரிடம்  வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து கிராம மக்கள் கலைந்து  சென்றனர்.

Tags:    

Similar News