சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் இரவில் உலா வந்த சிறுத்தை; வாகன ஓட்டிகள் அச்சம்!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் இரவில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.;
சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் இரவில் உலா வந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகள் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதி சாலையை கடந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று அதிகாலையில் தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 6வது கொண்டை ஊசி வளைவில் சிறுத்தைப்புலி ஒன்று சாலையை கடக்க முயன்றது, வாகனத்தில் இருந்தவர்கள் சிறுத்தைப்புலியைப் பார்த்து பீதி அடைந்தனர்.
உடனே அவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு சிறுத்தைப்புலியை செல்போனில் படம் பிடித்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சிறுத்தைப்புலி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. தற்போது இந்த வீடியோ தாளவாடி மலைப்பகுதியில் வைரலாகி வருகிறது. திம்பம் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.