கார்த்திகை தீபத்தையொட்டி சிவன்-முருகன் கோவில்களில் இன்று மாலை மகா தீபம்

கார்த்திகை தீப விழாவையொட்டி இன்று மாலை கோவில்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றப்படுகிறது.

Update: 2021-11-19 10:15 GMT

ஈரோடு சிவன் கோயிலில் ஏற்றப்பட்ட சொக்கப்பனை.

ஈரோடு மாவட்டத்தில் இன்று கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று மாலை கோவில்கள் மற்றும் வீடுகளில் தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர் (ஈஸ்வன்) கோவில், மகிமாலீஸ்வரர், பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை கோவில் வளாகம் முழுவதும் தீபம் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்தையொட்டி ஈரோடு அடுத்த திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்படுகிறது. தொடர்ந்து சொக்கப்பணை  கொளுத்தப்படுகிறது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். கோபிசெட்டிபாளையம் அமரபணீஸ்வரர், பச்சை மலை சுப்பிரமணியர் கோவில், பவளமலை முத்து குமாரசாமி கோவில், ஈஸ்வரன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இதையொட்டி மாலை தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது. அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள செல்லீஸ்வரர் கோவில், தவிட்டுபாளையம், மாதேஸ்வரன் கோவில், பிரம்மதேசம், வேம்பத்தி, ஒலகடம் சிவன் கோவில்களில் இன்று மாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

தொடர்ந்து இரவு கோவில் வளாகத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். அந்தியூர் நால் ரோடு பகுதியில் உள்ள சொக்கநாதர் மலை கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது.சென்னிமலை முருகன் கோவிலில் இன்று அதிகாலை முருகனுக்கு பால், தயிர், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது. கோவில் அடிவாரம் நுழைவு வாயில் பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு சொக்கப்பணை கொளுத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் இன்று மாலை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பணை கொளுத்தப்படுகிறது. மேலும் ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன - மாரியம்மன், கோபி சாரதா மாரியம்மன், கொண்டத்து காளியம்மன், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் இன்று இரவு பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

Tags:    

Similar News