ஈரோடு: நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்; கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தகவல்

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தகவல் தெரிவித்துள்ளார்.;

Update: 2025-03-22 01:00 GMT

நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும், அதன் நுட்பங்களுக்குமான பயிற்சி வகுப்பு அடுத்த மாதம் ஏப்ரல் 15ம் தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சிக்கான விண்ணப்பங்கள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் அடுத்த மாதம் 13ம் தேதி வரை ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும்.

பயிற்சி காலம் 2 மாதங்கள் ஆகும். எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றவர்கள் பயிற்சியில் சேரலாம். பயிற்சியின்போது, நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரம் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். இப்பயிற்சிக்கான கட்டணம் ரூ.4,550 செலுத்த வேண்டும்.

பயிற்சி முடித்து சான்று பெற்றவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தேர்ச்சி பெற்றவர்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்புள்ளது.

மேலும், விவரங்களுக்கு சித்தோடு கொங்கம்பாளையம் பிரிவு எஸ்.வி.என். பள்ளி பின்புறம் உள்ள, ஈரோடு கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று, ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா தெரிவித்துள்ளார்.

Similar News