ஈரோடு மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 13 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று பரவியது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-11 15:00 GMT

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 13 பேருக்கு கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் உயர்ந்து வரும் நிலையில் தமிழகத்திலும் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா மீண்டும் மெல்ல தலைதூக்கத் துவங்கியுள்ளது. ஈரோட்டில் கடந்த வாரம் முழுவதும் தினமும் சராசரியாக ஒரு நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இன்று மாலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மாவட்டத்தில் இரண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் அதாவது 7 நாட்களில் 13 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இதையடுத்து இவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே முகாமிட்டு சிகிச்சை பெறுகின்றனர். இதைத்தொடர்ந்து தொற்று பாதித்த பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதாரப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News