ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்: இன்று விடுமுறை எடுத்து கலந்து கொண்ட அரசு ஊழியர்கள்!
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.25) நடந்த ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் விடுமுறை எடுத்து கலந்து கொண்டனர்.;
ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ-ஜியோ) சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக அரசு தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஆகியவற்றை ஒப்படைக்க வேண்டும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினை சேர்ந்த அரசு ஊழியர்கள் தரையில் அமர்ந்தபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள் மற்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் இன்று விடுமுறை எடுத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.