பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் தாய் மாமன் சீர் : கோபியில் ருசிகரம்

கோபிசெட்டிபாளையத்தில் நடந்த பூப்பு நன்னீராட்டு விழாவில் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் தாய் மாமன் சீர் கொண்டு சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதுடன், மகிழ்ச்சி அடையவும் வைத்துள்ளது.

Update: 2021-03-04 10:17 GMT

தமிழ் கலாச்சாரத்தில் தாய் மாமன் சீர் என்பது முக்கியத்துவம் பெற்றது. சகோதரிகளான அக்கா அல்லது தங்கை மகள்களுக்கு தாய் மாமன் சீர் செய்வது என்பது மிகப்பெரிய மரபாக, மரியாதையாக கருதப்படுகிறது.

அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காளியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த சிவக்குமார் - பூங்கொடி ஆகிய தம்பதியரின் மகள் ரிதன்யாவுக்கு பூப்பு நன்னீராட்டு விழா நடத்த திட்டமிட்டனர்.

அதன் அடிப்படையில் கோபிசெட்டிபாளையம் நாய்க்கன்காடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்தன. இவ்விழாவில் டி.என்.பாளையம் பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன், அவரது மனைவி பாரதி ஆகியோர் தாய் மாமன் சீர் வரிசையை பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் ஏற்றி எடுத்துச்சென்றனர்.

உறவினர்கள், நண்பர்களையும் மாட்டு வண்டியிலேயே அழைத்து வந்தனர்.இந்த காட்சியை கோபிசெட்டிபாளையம் நகர் பகுதி வாசிகள் ஆச்சரியத்துடனும், அதிசயத்துடனும் பார்த்து ரசித்தனர். தாய் மாமன் சீர் கொண்டுவருவது காலங்காலமாக நடைமுறையில் உள்ள வழக்கம் என்பதால் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் தான் கொண்டுவரவேண்டும் என்ற மரபு உளளது.

தாய் மாமன் சொல்லும்போது, 'நான் சுற்றுச்சூழல் மாசு படுவதை விரும்பாதவன். ஆகவே தான் சீர் கொண்டு வரும்போது காரில் வராமல் உறவினர்கள் மற்றும் நண்பர்களை மாட்டு வண்டியில் அழைத்து வந்தேன்' என்றார்.

Tags:    

Similar News