முன்களப்பணியாளர்களுக்கு பிஸ்கட் -டீ! செய்தியோடு சேவையும் தந்த நிருபர்கள்

ஊரடங்கின்போது, கோபிச்செட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் காவல்துறையினர்களுக்கு, செய்தியாளர்கள் சார்பில் டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது.

Update: 2021-04-25 08:26 GMT

கொரோனா தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், அடன் பரவலை தடுக்க, மத்திய -மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி, இரவுநேர ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் வாரத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் முழு பொது முடக்கம் அறிவித்து, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனால் உணவகங்கள், தேனீர் கடைகள் உட்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வாகனப் போக்குவரத்த் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன. எனினும், ஊரடங்கு நேரத்தில் மக்களின் பாதுகாப்பிற்காக சுகாதாரத்துறையினர், காவல்துறையினர்கள் கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.

களத்தில் இருக்கும் சுகாதாரத்துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் புத்துணர்வு பெறும் நோக்கில், ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செய்தியாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் இணைந்து, டீ வழங்கினர். கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப்பணியாளர்கள், அவசர ஊர்தி ஓட்டுநர்கள் உட்பட அனைத்து மருத்துவப்பணியாளர்களுக்கும் பிஸ்கட் மற்றும் தேனீர் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மொடச்சூர் சிக்னல் அருகில் கடும் வெயிலிலும் சாலையில் நின்று வாகனச்சோதனையில் ஈடுபட்டு பொதுமுடக்கத்தை பாதுகாப்புடன் செயல்படுத்தி வரும் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர், ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள்,  போக்குவரத்து காவலர்கள் உட்பட அனைத்து காவலர்களுக்கும் பிஸ்கட் - டீ வழங்கப்பட்டது.

சட்டம் ஒழுக்கு குறித்து ரோந்து சென்று வரும் தாசில்தார் மற்றும் வருவாய்துறையினருக்கும், இதேபோல் டீ -  பிஸ்கட் செய்தியாளர்களால் வழங்கப்பட்டது. செய்திகளோடு சேவைகளையும் வழங்கி வரும் செய்தியாளர்களை, முன்களப் பணியாளர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News