கொடிவேரி அணையில் தீடீர் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-14 03:45 GMT

வெள்ள அபாய எச்சரிக்கை பேனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்துள்ள பவானிசாகர் அணையிலிருந்து வரும் நீரானது கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள கொடிவேரி அணையில் தேக்கி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை கால்வாய் மூலம் விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படும்.

இந்நிலையில் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 5849 கன அடி வந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து பவானி ஆற்றில் 5114 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. அணையில் உள்ள தடுப்பு கம்பிகளை தாண்டி நீர் ஆர்பரித்து கொட்டி வருவதால் அணைக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அணையில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவின்படி, கொடிவேரி அணைக்கு இருபுறமும் சுற்றுலாப் பயணிகள் செல்லாதவாறு கடத்தூர் மற்றும் பங்களாபுதூர் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் சவுண்டபூர், மேவானி, கீழ்வானி, கூகலூர், அரக்கன்கோட்டை, அம்மா பாளையம், கள்ளிப்பட்டி, அத்தாணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கரையோர மக்கள் குளிக்க, துணி துவைக்க, மீன் பிடிக்க, கால்நடைகள் மேய்க்க செல்ல வேண்டாம் எனவும், ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் பொதுப்பணித்துறை சார்பில் அறிவுறுத்தபட்டு வருகிறது.

Tags:    

Similar News