ஈரோட்டில் துப்பாக்கி முனையில் பணம் கேட்டு மிரட்டல்

ஈரோட்டில் மளிகைக் கடைக்காரரிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-04-28 18:00 GMT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டியில் மளிகைக்கடை நடத்தி வருபவர் சந்தோஷ். இவர் மினி சரக்கு வாகனம் வாங்க ஆசைப்பட்டு துறையம்பாளையம் பகுதியை சேர்ந்த மினி சரக்கு வாகன ஓட்டுநர் பிரபு என்பவரிடம் கடந்த வாரம் ரூ.2.50 லட்சம் கொடுத்துள்ளார்.

ஒரு வார காலமாக வாகனம் வாங்கிக் கொடுக்காமல் இழுத்தடித்த பிரபு மேலும் ரூ.2 லட்சம் பணம் சந்தோஷிடம் கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ் தன்னிடம் தற்போது இவ்வளவு தொகை இல்லை எனவும் ச.கணபதிபாளையத்தில் உள்ள தனது நண்பர் ராஜகுருவிடம் கடன் வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று பிரபு சந்தோஷை சந்தித்து தனக்கு உடனடியாக பணம் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சந்தோஷ் ச.கணபதிபாளையம் சென்று பணம் வாங்கி வருகிறேன் என தெரிவித்தால் பிரபுவின் இருசக்கர வாகனத்தில் இருவரும் ச.கணபதிபாளைம் நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்திய பிரபு தனது வாகனத்தின் இருக்கையின் அடியில் வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து புல்லட்களை லோடு செய்த படி பணம் தரவில்லையெனில் சுட்டுக்கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

அதில் பயந்து போன சந்தோஷ் பிரபுவை அழைத்துக்கொண்டு ச.கணபதிபாளையம் வந்துள்ளார். அங்கு பணம் கேட்டு சந்தோஷின் நண்பர் ராஜகுருவிடம் பேசிக்கொண்டிருந்த போது பிரபு துப்பாக்கி வைத்திருப்பதை ராஜகுருவிடம் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் ஒன்று கூடவே துப்பாகியுடன் இருந்த இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து பிரபு தப்பியோடினார்.

இச்சம்பவம் குறித்து கோபிசெட்டிபாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் துப்பாகியுடன் இருந்த இருசக்கர வாகனத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தப்பியோடிய பிரபுவை தேடி வருகின்றனர்.இதனால் ச.கணபதிபாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News