கோபியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

பத்தாம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதியானதால் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Update: 2021-09-07 10:15 GMT

பைல் படம்.

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியதால் கடந்த 1ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல், பிளஸ்- 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகள் உடன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோபிச்செட்டிபாளையம் அருகே சிறுவலூர் மணியக்காரன்புதூரில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்று உறுதியான மாணவி படிக்கும் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு மாணவிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அங்கு படிக்கும் 19 மாணவ மாணவிகள், 5 ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் நாளை வரும். அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ- மாணவிகள் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை. மாணவ- மாணவிகள் ஊர்களில் யாருக்காவது தொற்று ஏற்பட்டால் அவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர், உடன் பிறந்தோர், உறவினர்கள் யாருக்காவது தொற்று அறிகுறி இருந்தாலும் அவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News