கூகலூர் கிளை வாய்க்காலில் உடைப்பு: 2 ஆயிரம் ஏக்கர் நடவு பணிகள் சேதம்

தொட்டிபாளையத்தில் உள்ள கூகலூர் கிளை வாய்க்காலில் உடைந்து சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நடவு பணிகள் முற்றிலும் சேதம்.

Update: 2021-11-05 14:00 GMT

நீரில் மூழ்கிய விவசாய நிலம்.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் மூலமாக ஆண்டுதோறும் இரு போக சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர், தொட்டிபாளையம், நஞ்சை கோபி, மேவாணி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடவு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு கோபி மற்றும் சுற்றுப்புற பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. தடப்பள்ளி வாய்க்காலின் கிளை வாய்க்காலான கூகலூர் கிளை வாய்க்காலில் ஏற்கனவே பாசனத்திற்காக விடப்பட்ட தண்ணீர் செல்லும் நிலையில் மழை நீரும் சேர்ந்ததால் தண்ணீரின் அளவு அதிகரித்ததை தொடர்ந்து தொட்டிபாளையம் என்ற இடத்தில் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.

வாய்க்கால் உடைப்பு காரணமாக வெளியேறும் தண்ணீரால் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நடவு பணிகள் செய்திருந்த விளைநிலங்களுக்குள் புகுந்து சேதமடைந்தது. இந்நிலையில் வாய்க்கால் கரை உடைப்பு படிப்படியாக உயர்ந்து தற்போது 20 அடியாக அதிகரித்து வருவதால் தண்ணீர் முழுமையாக நிறுத்தப்பட்டால் மட்டுமே கரையை சீரமைக்க முடியும் என்ற நிலை உள்ளது.

வாய்க்கால் கரைகள் பராமரிப்பு செய்து பல ஆண்டுகள் ஆனதால் கரை உடைப்பு ஏற்பட்டு வருவதாகவும், வாய்க்கால் கரையை முழுமையாக பராமரிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News