கோபிசெட்டிபாளையம் செய்திகள் சில வரிகளில்..

கோபிசெட்டிபாளையம் அருகே 3,250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் உள்ளிட்ட பல முக்கிய செய்திகள் உங்களுக்காக...

Update: 2022-06-23 12:00 GMT

பைல் படம்.

*  ஒன்பதாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது: கோபி அருகே கரட்டடிபாளையத்தை சேர்ந்த 14 வயது சிறுமி ஒன்பதாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பைக் மெக்கானிக் செபாஸ்டின் (வயது 30). சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி,  ஓராண்டுக்கு முன் கடத்தி சென்று திருமணம் செய்தார். சிறுமி நான்கு மாத கர்ப்பமாக உள்ளார். தகவலறிந்த சைல்டு லைன் அமைப்பினர், கோபி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செபாஸ்டியனை தேடி வந்த போலீசார்,  நேற்று கைது செய்தனர். பின், ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர். 

* 3,250 கிலோ ரேஷன் அரிசி கடத்திய இளைஞர் கைது: ஈரோடு மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் கோபிசெட்டிபாளையம் அடுத்த நம்பியூர் அருகே உள்ள ஓட்டர்கரட்டுப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வேன் மற்றும் ஆம்னி வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையில், 3,250 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ஆம்னி வேன் டிரைவரான நம்பியூர் நாடார் வீதியை சேர்ந்த பிரசாந்த் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், போலீசாரை கண்டு தப்பி ஓடிய சரக்கு வேன் டிரைவர் சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

* சிறுவலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எரப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகள் சவிதா. இவர் கோபியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு கவுந்தப்பாடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் போது, வெள்ளாங்கோயில் பகுதியை சேர்ந்த பெருமாள்கோயில்புதூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, பின்னர், இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவே எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, இருவரையும் வீட்டை விட்டு வெளியேறி சத்தியமங்கலத்தில் உள்ள கோவில் திருமணம் செய்து கொண்டு சிறுவலூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் இருவரின் பெற்றோரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சவிதாவின் பெற்றோர் ஏற்க மறுக்கவே கார்த்திகேயன் பெற்றோர் இதனை ஏற்றுக் கொண்டதையடுத்து இருவரும் கார்த்திகேயனின் வீட்டிற்கு சென்றனர்.

* இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில், பெண் உயிரிழப்பு: கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 57). இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கு உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, ஈரோடு-சத்தி சாலையில் உள்ள சாந்தி தியேட்டர் பிரிவு அருகே வந்த போது பின்னால், வந்த லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது‌. இதில், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், இருவரையும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த சண்முகம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News