அந்தியூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது
அந்தியூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார், 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுமேட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அந்தியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதிக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தவரை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், பனாங்காட்டூர் முல்லை நகரை சேர்ந்த சுப்பிரமணி (56) என்பதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 150 கிராம் அளவுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.