ஈரோடு காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா அணைகளிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2022-08-28 12:45 GMT

பவானி காவிரி கரையோர வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.

கர்நாடகா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 80,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இது மேலும் அதிகரிக்கப்பட்டு 1 லட்சத்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆற்றில் திறக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.


அதனைத்தொடர்ந்து பவானிசாகர் அணையிலிருந்து ஆற்றுக்கு 4,000 கன அடி நீர் என மொத்தம்  1லட்சத்து 14 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் செல்வதால்,  ஈரோடு மாவட்ட காவிரி கரையோர பகுதிகளான அம்மாபேட்டை, பவானி, ஈரோடு கருங்கல்பாளையம், வைரபாளையம், வெண்டிபாளையம், கொடுமுடி ஒன்றிய பகுதி காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


இதன் காரணமாக, பவானி நகராட்சிக்கு உட்பட்ட  கந்தன்பட்டறை மற்றும் பசுவேஸ்வரர் வீதி ஆகிய பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும்,  வெள்ளப்பெருக்கு காரணமாக பவானி கூடுதுறையில் இன்று முதல் பரிகாரம் மற்றும் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News