ஈரோடு மாநகரில் டெங்கு கொசு உற்பத்திக்கு வழி வகுத்தால் அபராதம்

ஈரோடு மாநகரில், டெங்கு கொசு உற்பத்திக்கு வழி வகுத்தால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-07-20 11:30 GMT

பருவமழை காலம் தொடங்குவதையொட்டி ஈரோடு மாநகராட்சி உட்பட்ட 60 வார்டுகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சி பணியாளர்கள் தினமும் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக 300 பணியாளர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சாக்கடைகள் தூர்வாரும் பணி, கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

அதேசமயம் சுகாதாரப் பணியாளர்கள் வீடுகளில் டெங்கு கொசு குறித்த ஆய்வு பணிகளை நடத்தி வருகின்றனர். வீடுகளில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுரை வழங்கி வருகின்றனர். இவ்வாறு ஆய்வு செய்து வரும் அலுவலர்கள் கொசு உற்பத்தியாகும் சூழ்நிலையில் இருக்கும் கடைகள், வீடுகளுக்கு அறிவுரை கூறி அபராதம் விதிக்காமல் மருந்து மட்டும் தெளித்து வருகின்றனர்.

இனி அடுத்த கட்டமாக, மாநகரப்பகுதியில் டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News