ஈரோடு முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

ஈரோடு முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2021-06-03 11:41 GMT

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட முதியோர் இல்லம்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை  குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் வயது பேதமின்றி தாக்கி வருகிறது. இந்நிலையில் ஈரோடு திண்டலில் லிட்டில சிஸ்டர் என்ற பெயரில் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து 76 முதியோர் தங்கியுள்ளனர். முதியோர்கள் தங்குவதற்கு பல்வேறு தனித்தனி அறைகள் உள்ளன.

இந்நிலையில் இங்கு தங்கியுள்ள முதியவர்களில் ஒரு சிலருக்கு சளி, காய்ச்சல் இருந்தது. இதையடுத்து முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள 76 முதியோர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகளில் 40 முதியோர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 36 முதியவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். முதியோர் இல்லத்தில் கொரோனா பரவலை அடுத்து ஈரோடு மாநகராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கையாக முதியோர் இல்லத்தில் மாநகராட்சி பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

Tags:    

Similar News