கிராமப்புறங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க கிராம கமிட்டி,மொபைல் டீம் : எஸ்பி தகவல்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக கிராம கமிட்டி மற்றும் மொபைல் டீம் உருவாக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.சசிமோகன் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-18 09:03 GMT

ஈரோடு போலீஸ் எஸ்பி சசிமோகன்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை கிராமப்புறங்களில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கிராம மக்கள் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கிராமப்புறங்களில் கொரோனா  பரவலை கட்டுபடுத்த போலீசார் புது முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-

ஊரடங்கு காலமான தற்போது கிராமங்களில் மக்கள் ஓரிடத்தில் கூட்டமாக கூடி பல மணி நேரம் பேசுகின்றனர். மேலும் கிராமப்புறங்களில் நடக்கும் திருமணங்கள், துக்க நிகழ்வுகள் குறித்து தகவல்  தெரிவிப்பதில்லை.

இதுபோன்ற நிகழ்வுகளில் அதிகளவில் மக்கள் ஒன்றாக கூடுகின்றனர். இதுவே கிராமப்புறங்களில் கொரோனா பரவலுக்கு பிரதான காரணமாக அமைகிறது.

கிராமங்களில் பொதுமக்கள் ஓரிடத்தில் கூடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தகவல் தெரிவித்தனர். இதனடிப்படையில் கிராமங்களில், கிராம கமிட்டி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் போலீசார் ஒருவருடன் சம்பந்தப்பட்ட கிராமங்களை சேர்ந்த முக்கிய நபர்கள் இதில் இடம் பெற்று இருப்பர். இதன் மூலம் கிராமங்களில் கூட்டம் கூடுவது குறித்து கிராம கமிட்டியினர் தகவல் அளிப்பர்.

அதனடிப்படையில் போலீசார். வருவாய் துறையினர், சுகாதார துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவர்.ஏற்கனவே கிராம கமிட்டி உள்ள இடங்களில் உடனடியாக அவை செயல்பாட்டுக்கு வரும்.

மேலும் கிராமங்களில் பொதுமக்கள் ஒன்றாக சமூக இடைவெளியின்றி கூடுவதை தடுக்க மொபைல் டீம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவர்களும் கண்காணிப்பில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News