போலீஸ் ஏட்டை அரிவாளால் வெட்டிய இளநீர் வியாபாரி கைது

போலீஸ் ஏட்டை அரிவாளால் வெட்டிய இளநீர் வியாபாரி கைது செய்யப்பட்டு கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து சிறையில் அடைப்பு.

Update: 2021-09-13 11:30 GMT

கைது செய்யப்பட இளநீர் வியாபாரி முருகன்.

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி பிரிவு, பகுதியைச் சேர்ந்தவர் ராஜு (வயது 45). கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக (தலைமை காவலராக) பணி செய்து வருகிறார். இவர் நேற்று மதியம் பணியில் இருந்தார். அப்போது சுண்ணாம்பு ஓடை, பவானி ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தகராறு நடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்ததுள்ளது. இதையடுத்து போலீஸ் ஏட்டு ராஜு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு புறப்பட்டார். அப்போது தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்ந்த இளநீர் வியாபாரி முருகன் (45) என்பவர் மது வாங்க கடன் கேட்டு ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தார். ராஜு இதுகுறித்து விசாரித்து கொண்டிருந்தார்.

அப்போது இளநீர் வியாபாரி முருகன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஏட்டு ராஜுவை வெட்டினார். இதில் வலது மார்பு ,வலது கையில் ஏட்டு ராஜுக்கு வெட்டு விழுந்தது. ரத்தம் சொட்டிய நிலையில் அவர் கீழே சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஏட்டு ராஜுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனிடையே தப்பி ஓட முயன்ற இளநீர் வியாபாரி முருகனை அங்கிருந்தவர்கள் பிடித்துக் கொண்டனர்.

தகவரறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருங்கல்பாளையம் போலீசார் முருகனை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். போலீஸ் விசாரணையில் முருகன் குடிபோதையில் போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதனையடுத்து கருங்கல்பாளையம் போலீசார் இளநீர் வியாபாரி முருகன் மீது தகாத வார்த்தையால் பேசுதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு அதிகாரியை காயம் ஏற்படுதல், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் ஏட்டு ராஜு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News