கொரோனா பரவல் எதிரொலி: கோவில்களில் பக்தர்கள் வழிபட தடைவிதிப்பு

கொரோனா பரவல் காரணமாக, ஈரோட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் முக்கிய கோவில்களில் சென்று வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-09-17 12:16 GMT

ஈரோட்டில், கட்டுப்பாடுகள் காரணமாக, கோவிலுக்கு வெளியே சாமி தரிசனம் செய்த பக்தர்கள்.

ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் பொதுமக்கள் வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில், சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில், அந்தியூர் பத்ரகாளி அம்மன், பாரியூர் கொண்டத்து காளியம்மன், கொடுமுடி மகுடேஸ்வரர், பவானி சங்கமேஸ்வரர், செல்லாண்டி அம்மன், ஈரோட்டில் பெரிய மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன், கோட்டை பெருமாள் உள்பட கோவில்களில் மூன்று நாட்களுக்கு பொது மக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று புரட்டாசி மாதம் பிறப்பை யொட்டி பெருமாள் கோவில்களில் மக்கள் வழிபட சென்றனர். ஆனால் இன்று பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் கோவிலுக்கு வெளியே முன்பு நின்று விளக்கேற்றி வழிபட்டு சென்றனர். 

Tags:    

Similar News