ஊரடங்கிலும் நகர்வலம் - ஈரோட்டில் 820 வாகனங்கள் பறிமுதல்

ஒரே நாளில் சோதனையின் போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 820 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.75 லட்சம் அபராதம் வசூலிக்கபட்ள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-06-01 05:50 GMT

தமிழகத்தில், ஜூன் 7-ஆம் தேதி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஊரடங்கை மீறி வெளியே சுற்றினால், வாகனங்கள் பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை தெரிவித்திருந்தார்.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில்,  மாவட்ட எல்லையில் உள்ள 13 நிலையான சோதனைச்சாவடிகளிலும், 42 தற்காலிக சோதனைச் சாவடிகளிலும், போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும் முழு ஊரடங்கை பொருட்படுத்தாமல் வழக்கம் போல் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் சுற்றி திரிகின்றனர். இதையடுத்து போலீசார் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

ஊரடங்கின் 7-வது நாளான நேற்று, ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று மட்டும், முகக்கவசம் அணியாமல் வந்த 200 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல், ஊரடங்கு தடையை மீறி சுற்றியதாக 750 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 800 இருசக்கரவாகனங்களும், 20 நான்கு சக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூ.2.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடியால் தற்போது வெளியே சுற்றுபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

Tags:    

Similar News