வெளிமாநில டிரைவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம்: ஈரோடு மாநகராட்சி கெடுபிடி!

வெளிமாநில லாரி, வேன் டிரைவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் தேவை என்று, ஈரோடு மாநகராட்சி அறிவித்துள்ளது.

Update: 2021-06-15 14:10 GMT

ஈரோடு வ.உ.சி பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட், கொரோனா தாக்கம் காரணமாக தற்காலிகமாக பஸ் நிலையத்தில் மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. தினமும் பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வியாபாரிகள் பஸ் நிலையத்திற்கு வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சி சார்பில் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. இதையடுத்து வெளிமாநில லாரி, வேன் ஓட்டுனர்கள், கிளீனர்கள் கொரோனா நெகடிவ் சான்று இருந்தால் மட்டுமே காய்கறி மார்க்கெட்டுக்குள் அனுமதிக்க முடியும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது.

ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகரில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர, வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்து வந்த தினசரி, காய்கறி சந்தை மூடப்பட்டது. மொத்த வியாபாரம் மட்டும் பஸ் நிலைய வளாகத்தில் நடந்து வருகிறது. தள்ளுவண்டி, நடமாடும் காய்கறி வண்டிகளில் விற்பனை செய்வோர் மட்டும் மாநகராட்சி அனுமதியுடன் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதுபோல், ஆந்திரா, கர்நாடாக மாநிலம் போன்ற வெளி மாநிலங்களில் இருந்து வரும் லாரிகள் மூலம் காய்கறிகள் கொண்டு வரும் ஓட்டுனர்கள், கிளீனர்களுக்கு இங்கு கொரோனா பரிசோதனை செய்வதில் சிக்கல் உள்ளது. கொரோனா பரிசோதனை எடுக்கும் வெளி மாநில நபர்களுக்கு பாசிடிவ் என வந்தால் அவர்களை எப்படி பிடிப்பது, எப்படி தனிமைப்படுத்துவது?

எனவே, வெளிமாநிலத்தில் இருந்து ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு வரும், லாரி மற்றும் வேன் ஓட்டுனர்கள், கிளீனர்கள் அவர்கள் சொந்த ஊரில் கொரோனா பரிசோதனை செய்து, நெகடிவ் என சான்று கொண்டு வந்தால் மட்டுமே மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இது குறித்து வெளிமாநில லாரி, வேன் ஓட்டுனர்களுக்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News