மாநகர் பகுதியில் குடும்பம் குடும்பமாக பரவும் கொரோனா

ஈரோடு;

Update: 2021-05-12 07:15 GMT

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வருகிறது.நாளுக்கு நாள் தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.இதே போல் தினமும் உயிரிழப்பும் ஏற்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

முன்பு முதியவர்கள், மூதாட்டிகள் அதிகளவு இறந்து வந்தனர். தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் இறக்கின்றனர்.

அதே நேரத்தில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது.

எனினும் தொற்றின் தாக்கம் குறைந்தபாடில்லை. ஈரோடு மாநகர் புறநகர் என மாவட்டம் முழுவதும் தொற்று அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக புதிய உச்சமாக ஒரே நாளில் 925 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு இணையாக ஈரோட்டிலும் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்களை பீதி அடைய செய்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

மாவட்டம் முழுவதும் மூன்றில் ஒரு பங்கு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான். நேற்று மட்டும் மாநகர் பகுதியைச் சேர்ந்த 302 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்பு தெருவுக்கு ஒருவர், வீட்டுக்கு ஒருவர் என தொற்று ஏற்பட்டு வந்தது. தற்போது குடும்பம் குடும்பமாக தொற்று பரவி வருகிறது.

ஒரு வீட்டில் ஐந்து நபர்கள் இருந்தால் அவர்கள் ஐந்து பேருக்கும் தொற்று ஏற்பட்டு விடுகிறது. ஈரோடு அரசு மருத்துவமனை, பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இயங்கும் ஸ்கிரீனிங் சென்டருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, பிரெசர், ரத்தக் அழுத்தம், சர்க்கரை உட்பட 5 வகையான பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

இதன் மூலம் நோயின் தன்மை துல்லியமாக கண்டறியப்பட்டு அதற்கு தகுந்தது போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மாநகர் பகுதியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் தனிமையில் இருப்பவர்கள் மிகச் சீக்கிரமாகவே தொற்றில் இருந்து குணமடைந்து வருகின்றனர். ஈரோடு அரசு மருத்துவமனை ஸ்கிரீனிங் சென்டரில் தினமும் 100 பேர், மாநகராட்சி திருமண மண்டப ஸ்கிரீனிங் சென்டரில் தினமும் 150 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

மாநகராட்சி சார்பில் மட்டுமே தினமும் ஆயிரத்து 300 பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News