ஈரோடு மாநகராட்சி: வளர்ச்சி பணிகள் குறித்து எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை

Update: 2021-02-12 03:48 GMT

ஈரோடு மாநகராட்சியில் தற்போது ஸ்மார்ட் சிட்டி உட்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே. எஸ். தென்னரசு, நான்கு மண்டல உதவி ஆணையாளர்கள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதுகுறித்து கே .எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ கூறும்போது,

ஈரோடு மாநகராட்சி பகுதியில் தற்போது ரூ .30 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை உடனடியாக விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 14 கோடி மதிப்பிலான டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையும் விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேப்போன்று ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு இணைப்பு மூலம் குடிநீர் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 28 ஆயிரம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முடிவதற்குள் 35 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்து முடிக்கப்பட்டு விடும். வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் 1.5 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். இந்த கூட்டத்தில் அதிமுக பகுதி செயலாளர் கோவிந்தராஜன், தங்கமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News