பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு

ஜே.சி.பி. எந்திரத்தை முற்றுகையிட்ட மக்களால் பரபரப்பு;

Update: 2021-02-11 17:23 GMT

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சிந்தன் நகரில் பாதாள சாக்கடைக்கான பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அங்கு பணிகளை தொடங்குவதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். திடீரென பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:- ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சிந்தன் நகர்,மாதவ காடு ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்நிலையில் இங்கு பாதாள சாக்கடைக்கான பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது. இங்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குடியிருப்புகள் நிறைந்த எங்கள் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது. இதற்கு பதிலாக வேறு இடத்தில் அவர்கள் அமைத்து கொள்ளலாம் இவ்வாறு அவர்கள் கூறினர்.  இதையடுத்து அங்கு நடந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Tags:    

Similar News