ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்

ஈரோடு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 3வது நாளாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2023-06-25 14:30 GMT
தூய்மை பணியாளர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும். இதற்காக நாளை நடைபெறவுள்ள டெண்டர் குறித்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 480 நாள்கள் பணியாற்றிய தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ் அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியமான நாள் ஒன்றுக்கு 725 ரூபாயை ஏப்ரல் முதல் வழங்க வேண்டும்.

மாதந்தோறும் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு, எல்பிஎப் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று முன்தினம் முதல் தூய்மைப் பணியாளர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோர் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

2வது நாளாக நேற்று ஈரோடு மாநகராட்சியில் உள்ள 4 மண்டல அலுவலகங்கள் முன்பாகவும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, மாநகராட்சி மைய அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், 3வது நாளாக இன்று  (ஞாயிற்றுக்கிழமை) தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்கிறது. பணியாளர் கள் யாரும் பணிக்கு வர வில்லை.

இதுகுறித்து ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி கூறியதாவது, 3வது நாளாக இன்று தூய்மைப் பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை காலை மாநகராட்சி அலுவலகத்தில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நாளை பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது.அதன் முடிவை பொறுத்து பணியாளர்களின் போராட்ட மும் முடிவு செய்யப்படும். இவ்வாறு சின்னசாமி கூறினார்.

Tags:    

Similar News