பெருந்துறை அருகே மின்சாரம் தாக்கி நண்பர்கள் 2 பேர் உயிரிழப்பு

பெருந்துறை அருகே மின்சாரம் தாக்கியதில் நண்பர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2022-02-10 16:00 GMT

பெருந்துறையில் உயர்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் நண்பர்கள் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தோப்பு பாளையத்தை சேர்ந்தவர் சமையல் தொழிலாளி பிரகதீஷ். இவரது நண்பர் ரஞ்சித் ஆட்டோ டிரைவராக உள்ளார். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் இன்று பிரகதீஷ் வீட்டின் பால்கனியில் நின்று பேசி கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பாக செல்லும் உயர்மின் அழுத்த மின்சார கம்பியின் மீது பிரகதீஷின் கை பட்டதால் மின்சாரம் தாக்கி துடி துடித்துள்ளார். இதனை கண்ட அவரது நண்பர் ரஞ்சித், பிரகதீஷை காப்பாற்ற முயற்சிக்கும் போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததால் நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து பிரகதீஷ் குடும்பத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெருந்துறை போலீசார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் தாக்கியதில் நண்பர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News