ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய ஆயுதப்படை காவலர் உள்பட 3 பேர் கைது

ஈரோட்டில் ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் நடத்திய ஆயுதப்படை காவலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-29 14:00 GMT

பைல் படம்.

ஈரோடு, வில்லரசம்பட்டி நால்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (46). இவர் அதே பகுதியில் கடந்த 8 வருடமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சம்பவத்தன்று இரவு 10.50 மணியளவில், சங்கு நகர் பகுதியைச் சேர்ந்த ஆசிக், ரசூல் ஆகிய இருவரும் சாப்பிட வந்துள்ளனர். அப்போது இருவரும் சாப்பிட கொத்து புரோட்டா கேட்டுள்ளனர். அதற்கு கடையில் பணியாற்றும் பணியாளர் கடையை மூடும் நேரம் வந்துவிட்டதால் கொத்துபரோட்டா இல்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிக் மற்றும் ரசூல் நாங்கள் யார் என்று தெரியுமா என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிக், தான் போலீஸ்காரரின் தம்பி என கூறி அவரது அண்ணன், ஆயுதப்படைக் காவலரான உமர்பாரூக்கிற்கு (24) செல்போன் மூலமாகத் தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு தனது நண்பரான இரட்டைபாளி வலசு பகுதியைச் சேர்ந்த, கார் பெயிண்டரான கார்த்தி (26) என்பவருடன் வந்த உமர்பாரூக், ஓட்டல் உரிமையாளருடன் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

அப்போது ஆயுதப்படை காவலர் உமர்பாரூக் அங்கிருந்த சேரை எடுத்து ஓட்டல் உரிமையாளர் ஈஸ்வரனை தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஆயுதப்படை காவலர் உமர் பாரூக், அவரது தம்பி ஆசிக், நண்பர் ரசூல் ஆகியோரை கைது செய்தனர். அவர்களது நண்பர்களில் ஒருவரான கார்த்தி தலைமறைவாகி விட்டார். காவல் துறையினர் அவரைத் தேடி வருகின்றனர். பின்னர் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News