தமாகா-அதிமுக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை: ஜிகே வாசன்

தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தினவிழாவில் இடம்பெறாதது குறித்து சர்ச்சையாக்கி அரசியலாக்க வேண்டாம் என தமாகா தலைவர் ஜிகே. வாசன் தெரிவித்தார்.

Update: 2022-01-22 07:15 GMT

ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி இல்லை. கட்டுப்பாடு இல்லாத இடமாக டாஸ்மாக் கடை உள்ளது. தமிழக அரசு டாஸ்மாக் கடையை மூடினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரும் நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி குறித்துப் பேசிக் கொண்டு உள்ளோம். கள் இறக்கும் போராட்டம் தவறு இல்லை. தமிழக அரசு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமியை அழைத்துப் பேசி முடிவு செய்ய வேண்டும்.

தமிழக அலங்கார ஊர்தி குடியரசு தினவிழாவில் இடம்பெறாதது குறித்து சர்ச்சையாக்கி அரசியலாக்க வேண்டாம். பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட பொருட்கள் தரம் குறைவானது என்று மக்கள் கூறுகின்றனர். ஆட்சியாளர்கள் மக்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சட்டக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து உண்மை நிலை என்ன என்று தெரிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசின் கோட்பாட்டின் படி நடவடிக்கை எடுத்து அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், அரசாங்கம் இது தொடர்பாக விழிப்புணர்வு வேண்டும் என்றார்.

Tags:    

Similar News