ஈரோடு மாவட்டத்தில் ரூ.6.19 லட்சம் பறக்கும் படையினரால் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை, 6.19 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-02-05 11:30 GMT
பறிமுதல் செய்யப்பட்ட பணத்துடன் அதிகாரிகள்.

ஈரோடு மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சி, நான்கு நகராட்சி, 42 பேரூராட்சிகளில் வேட்பு மனுத்தாக்கல் நேற்று முடிந்தது. மறுபுறம், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும்போது, அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

பணம் கொண்டு செல்லுதல், தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக புகார் தெரிவிக்க, இலவச தொலைபேசி எண்களாக, ஈரோடு மாநகராட்சிக்கு – 1800 42594890, 4 நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்காக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிக்கும் வகையில், 1800 4250424 என்ற எண் அறிமுகம் செய்தனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலக எண்ணுக்கு இதுவரை தேர்தல் தொடர்பாக ஒரு புகார் கூட பதிவாகவில்லை. அதேநேரம், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால், ஈரோடு மாநகராட்சி பகுதியில், 4.42 லட்சம் ரூபாய், புஞ்சை புளியம்பட்டியில், 52 ஆயிரம் ரூபாய், கடத்தூரில், 1.25 லட்சம் ரூபாய் என, 6.19 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

வரும் திங்கள் கிழமை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பின் தேர்தல் களம் சூடுபிடிக்கும். அப்போது, பணம் பட்டுவாடா, தேர்தல் செலவுகளுக்காக கொண்டு செல்வோரிடம் இருந்து அதிக பணம் சிக்குவதற்கு வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நாள் ஈரோடு மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இனி வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள். வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து அந்த எந்த அரசியல் கட்சியின் தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

Tags:    

Similar News