ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு

ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் இன்று ஒரு நாள் அனைத்து ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம்.

Update: 2021-12-10 07:15 GMT

ஜவுளிக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து ஜவுளி நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஈரோட்டில் இன்று 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு...

ஜவுளிக்கான ஜி.எஸ்.டி. வரி உயர்வை கண்டித்து

ஈரோட்டில் இன்று 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைப்பு...

ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். சமீபகாலமாக நூலின் விலை ஏற்றத்தால் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வு காரணமாக விசைத்தறி அவர்கள் தங்களது உற்பத்தியை குறைத்து உள்ளனர். சில இடங்களில் உற்பத்தியை கூட நிறுத்தி விட்டனர். நூல் விலையை ஒழுங்குமுறை படுத்திய நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதன் பின்னர் நூல் விலை சீரானது.

இந்நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மற்றொரு பேரிடியாக ஜி.எஸ்.டி.வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் அனைத்து வகையான ஜவுளி தொழில்கள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை நிலவியது. இந்த ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் சார்பில் இன்று ஒரு நாள் அனைத்து ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று ஈரோட்டில் அனைத்து ஜவுளி கடைகள் குடோன்கள் அடைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாநகரில் திருவெங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, என்.எம்.மஸ் காம்பவுண்ட், அகில் மேடை வீதி, ராமசாமி வீதி, சொக்கநாத வீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காய்ச்சலுக்கும் இடங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

ஈரோட்டில் 4 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆதரவு தெரிவித்து ஈரோடு ஜவுளி சந்தை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஜவுளி சந்தையில் உள்ள 272 தினசரி ஜவுளி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து விசைத்தறி உற்பத்தியாகின்ற ஒருநாள் நிறுத்தியுள்ளனர். இந்த கடை அடைப்பு காரணமாக ரூ. 50 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது.

இதுகுறித்து கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் தலைவர் கலைச்செல்வன் கூறியதாவது:- மாசுகட்டுப்பாட்டு விதிமுறைகள், தொடர்ந்து உயர்த்தப்படும் நூல் விலை, கொரோனா பரவல் தடுப்பூக்கான பொது முடக்கம் போன்ற காரணத்தால் ஜவுளி சார்ந்த அனைத்து தொழிலும் முடங்கிப்போனது. விசைத்தறி, டையிங், பிரிண்டிங், பிளீச்சிங், காலண்டரிங், ஆயத்த ஆடை உள்ளிட்ட பிற ஆடை தயாரிப்பு, ஜவுளி விற்பனை என அனைத்து நிலையிலும் ஆர்டர்கள் பெற்று, குறைந்த பட்ச லாபம் கூட ஈட்ட முடியாமல், கடும் நஷ்டத்தை சந்திக்கிறோம்.

இந்நிலையில் ஜவுளிக்கான, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை, 12 சதவீதமாக உயர்த்தி உள்ளனர். இதனால், அனைத்து வகையான ஜவுளி தொழிலும் மேலும் நஷ்டத்தையும், சிக்கலையும் சந்திக்கும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஜவுளி விலை உயரும். ஜவுளி தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் உள்ளதால், நுால் விலையை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த வேண்டும். ஜி.எஸ்.டி., உயர்வை ரத்து செய்ய வேண்டும், என வலியுறுத்தி இன்று, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வகையான ஜவுளி சார்ந்த நிறுவனங்களும் கடையடைப்பில் ஈடுபடுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News