ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக பழுதடைந்த 4 பள்ளிகளின் கட்டிடம் இடித்து அகற்றம்

பிற கட்டிடங்கள் இடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ளது.

Update: 2021-12-20 08:45 GMT

ஈரோடு கலெக்டர் அலுவலகம்.

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளியில் பழுதடைந்த கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் இறந்தனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பழுதடைந்த கட்டங்கள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் அபாயகரமாக உள்ள பள்ளி கட்டடங்கள், சுற்றுச்சுவரை கணக்கெடுப்பு செய்ய குழு அமைத்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உத்தரவிட்டார்.

பொதுப்பணித்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சி முகமை, வருவாய் துறை, உள்ளாட்சி துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, அந்தந்த பகுதியில் உள்ள பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்தனர். பழுதடைந்த கட்டடங்கள், சுற்றுச்சுவர்களை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ளதை உறுதி செய்து, எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

இம்மாவட்டத்தில் பழுதடைந்த கட்டடங்கள் கணக்கெடுப்பு பணி சில வாரமாக நடந்தது. கலெக்டர் உத்தரவுப்படி தற்போது அதனை இறுதி செய்து, 34 அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டடங்கள் கண்டறிந்துள்ளோம். அவற்றை பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து, அக்கட்டடங்களை இனி பயன்படுத்த முடியாது என உறுதி செய்து, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில், அந்தியூர், முகாசிபுதுார், குள்ளம்பாளையம் என, 34 பழுதடைந்த கட்டடங்கள் இடிக்க தயாராக உள்ளன. முகாசிபுதுார் அரசு பள்ளி கட்டடம் மிக ஆபத்தாக உள்ளதால், அதனை உடன் இடிக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன் அக்கட்டடம் இடிக்கப்பட்டது. இதைப்போல் கஸ்பாபேட்டை, வடுகப்பட்டி, தாண்டாம்பாளையம் பள்ளிகளில் மிகவும் அபாயகரமாக இருந்த கட்டிடங்கள் ஏற்கனவே இடித்து அகற்றப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் முதல் கட்டமாக 4 பள்ளிகளின் கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளன. பிற கட்டிடங்கள் இடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று மாலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ளது.இது தவிர, தனியார் பள்ளிகளில் உள்ள கட்டடங்களை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News