ஈரோடு மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 220 கோரிக்கை மனுக்களை பெற்று, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்
ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 220 கோரிக்கை மனுக்களை பெற்று, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 10ம் தேதி) வழங்கினார்.;
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா பெற்று, குறைகள் கேட்டறிந்த போது எடுத்த படம்.
ஈரோடு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 220 கோரிக்கை மனுக்களை பெற்று, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (மார்ச் 10ம் தேதி) வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், மேல்முறையீடு, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், புதிய குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, அரசு வேலை வேண்டுதல், சாலை வசதி, பேருந்து வசதி மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 220 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, இக்கூட்டத்தில் உலக சிக்கன தினவிழா-2024-னை முன்னிட்டு, நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, வினாடிவினா போட்டி மற்றும் சொற்றொடர் போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்ற 15 மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் பள்ளிகளுக்கு கேடயங்களையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் ஆவின் பாலகம் அமைத்திட ஊக்கத்தொகையினையும் அவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், உதவி ஆணையர் (கலால்) தியாகராஜன், மண்டல உதவி இயக்குநர் (சிறுசேமிப்பு) விஜயராஜ்குமார், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சக்திவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, துணை ஆட்சியர் (பயிற்சி) கே.சிவபிரகாசம் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.