தமிழக அளவில் வரி வசூலில் ஈரோடு மாநகராட்சிக்கு 3வது இடம்: 58 அலுவலர்களுக்கு பாராட்டு!

ஈரோடு மாநகராட்சியின் சார்பில் வரி வசூல் செய்த 58 அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ ராஜ கோபால் சுன்கரா கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.;

Update: 2025-04-22 10:10 GMT

ஈரோடு மாநகராட்சியின் சார்பில் வரி வசூல் செய்த 58 அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ ராஜ கோபால் சுன்கரா கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

ஈரோடு மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டில் சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் ஆக மொத்தம் 4,27,338 வரி விதிப்பு எண்கள் உள்ளது.

அதற்கான வருடாந்திர நடப்புக் கேட்புத் தொகை ரூ.106.87 கோடி ஆகும். அதில் ரூ.87.19 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்த வசூல் சதவீதம் 81.58 ஆகும். தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் கீழ் உள்ள 24 மாநகராட்சிகளில், ஈரோடு மாநகராட்சி சிறப்பான முறையில் வரி வசூல் செய்து 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரி வசூல் செய்த அலுவலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது.  இதில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு 58 அலுவலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில்,  ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி ஆணையர் (பொ) தனலட்சுமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News