கோபிசெட்டிபாளையம்: இறந்ததாக கருதப்பட்டவர் உயிரோடு வந்ததால் பரபரப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாப்புதூர் பகுதியில், இறந்ததாக கருதப்பட்ட நபருக்கு இறுதிச் சடங்கு முடிந்து 4 நாட்கள் ஆன நிலையில், அந்த நபர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Update: 2022-04-05 11:00 GMT
மூர்த்தி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த பங்களாப்புதூர் அருகே உள்ள புஞ்சைதுறையம் பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). கரும்பு வெட்டும் கூலித்தொழிலாளி, கர்நாடகா மாநிலம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்வது வழக்கம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்,  கரும்பு வெட்டும் வேலைக்கு சென்ற மூர்த்தி,  பின்னர் வீடு திரும்பவில்லை. மூர்த்தியின் மகன்கள் கார்த்தி மற்றும் பிரபுகுமார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தந்தை மூர்த்தியை தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 31-ந் தேதி சத்தியமங்கலம் பஸ் நிலைய பகுதியில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக கார்த்திக்குக்கு வாட்ஸ் அப்பில் தகவல் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து,  கார்த்திக் சத்தியமங்கலம் பஸ் நிலையம் சென்று பார்த்த போது, முகம் அழுகிய நிலையில் ஒரு ஆண் உடல் இருந்தது. அந்த நபருடைய உருவம் அவரது தந்தையை போன்ற தோற்றத்துடன் இருந்ததால், இறந்து கிடந்தது தனது தந்தைதான் என கார்த்திக் முடிவு செய்தார்.உடனே உடலை எடுத்துக்கொண்டு புஞ்சை துறையம்பாளையம் கொண்டு சென்று அந்த உடலை முறைப்படி சடங்குகள் செய்து உடலை அடக்கம் செய்தார்.

இந்நிலையில்,  மூர்த்தி திடீரென நேற்று இரவு உயிருடன் வீடு திரும்பினார். அவரை பார்த்ததும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தாலும்,  பின்னர் மகிழ்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பங்களாப்புதூர் போலீசார் உடனடியாக மூர்த்தி வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். இதனால் புஞ்சைதுறையம்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News