சிறுத்தை நடமாட்டம் என சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு வதந்தி: சைபர் கிரைம் விசாரணை
ஈரோடு 46 புதூரில் சிறுத்தை நடமாட்டம் என வீடியோ வெளியிட்டு வதந்தி பரவியது யார் என சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை.;
சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ காட்சி.
ஈரோடு அருகே 46 புதூர் சஞ்சய் நகரில் கடந்த வாரம் சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம விலங்கின் நடமாட்டம் இருந்தது. இது தொடர்பாக, ஈரோடு வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், மரநாய் என கண்டறியப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை எடுத்துக் கூறினார்.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் வீட்டில் உள்ள நாய் குரைத்துக்கொண்டு இருக்கிறது. திடீரென்று வெளியில் எதையோ பார்த்து நாய் பயந்து ஓடுகிறது. அடுத்த வினாடி இரும்பு கதவையும் தாண்டி சிறுத்தை ஒன்று வீட்டு வளாகத்துக்கு வருகிறது. சில வினாடிகளில் குரைத்துக்கொண்டு இருந்த நாயை அது கழுத்தை கவ்வி கொண்டு ஒரே பாய்ச்சலில் மதில்சுவரை தாண்டி ஓடுகிறது. இந்த காட்சி ஈரோடு சஞ்சய் நகர் குடியிருப்பு பகுதியில் நடந்தாக சமூக வலை தளத்தில் செய்தி பகிரப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மீண்டும் அச்சம் அடைந்தனர்.
இதுறித்து ஈரோடு வனச்சரகர் ரவீந்தரநாத் கூறியதாவது:சமீபத்தில் சஞ்சய் நகர் செய்தியுடன் இணைத்து பகிரப்பட்டு வரும் வீடியோ படம் வேறு எங்கோ எடுக்கப்பட்டது. தற்போது படத்தை மாற்றி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வேறு காட்சியை இணைத்து பகிர்ந்த வதந்தி பரப்பிய நபரின் விவரங்களை சேகரித்து வருகிறோம். அவர் மீது சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அவரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.